காரைதீவு நிருபர் சகா-
உள்ளுராட்சி மன்றங்களுக்கு கிடைக்கின்ற நிதிகளில் முத்திரை வரிகள் ஊடாக கிடைக்கும் நிதி, உள்ளுராட்சி மன்றங்களுக்கு உரிய வேளைக்குக் கிடைப்பதில் சில தாமதங்கள் எதிர்நோக்கப்படுவதால் இதனை இலகுபடுத்தி துரிதமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் குறித்த, கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சரினதும் உள்ளுராட்சி அமைச்சினதும் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் அண்மையில் (2016-12-19) முதலமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆசிய மன்றத்தின் பிரதிநிதி எம்.ஐ.வலீதின் பங்கு பற்றலுடன் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது இந்நிகழ்வில், கிழக்குமாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹீர், கிழக்குமாகாண இறைவரித் திணைக்கள வரி மதிப்பீடாளர் எம்.ஐ. எம். ரூமில், பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரிகளை விரைவாக பெறுவது சம்மந்தமாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த கலந்துரையாடலுக்கு இணைவாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சம்பந்த பட்ட உயர் அதிகாரிகளையும் உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் வாரத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆசியமன்றத்தின் நிதி அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்ட கணணி தொகுதி கிழக்குமாகாண இறைவரித் திணைக்களதிக்கு முதலமைச்சரினதும் உள்ளுராட்சி அமைச்சினதும் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களினால் கையளிக்க பட்டது குறிப்பிடத்தக்கதாகும்