ஏறாவூர் பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கின்ற போது அதிகாரிகளை அச்சுறுத்தி அபிவிருத்தித் திட்டங்களை தடைசெய்யும் போக்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் கைவிடவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச பொது அமைப்புக்களுக்கு தனது நிதியொதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை கையளித்து வைக்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அண்மையிலே நான் சுகயீனமுற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் எனது சுகயீனம் தொடர்பில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த சந்தர்ப்பத்தில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவினை அபிவிருத்தி செய்து தருகிறேன் நீங்கள் விரும்பினால் அனுதியினை தாருங்கள் விரைவாக அப்பணியினை முன்னெடுக்க முடியும் எனக்கேட்டுக்கொண்டார்.
இந்தவிடயம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் கிழக்கு மாகாண முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்திற்கான நிதிகளை நான் வழங்குகிறேன். அமைச்சர் ஹிஸ்புல்லாவினுடைய நிதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தினை வைத்திய அத்தியட்சகர் அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் அண்மையில் கூறியிருந்தார்.
உண்மையில் ஒரு அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்கின்ற போது மனித நேயம் கொண்ட யாரும் அந்த அபிவித்திப்பணிகளை நிறுத்தவோ, தடுக்கவோ முற்படமாட்டான். எந்தவொரு அரசியல்வாதியும் கடந்தகாலங்களில் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை முதலமைச்சரின் செயற்பாடானது சுயநல அரசியல் நோக்கமுடையதாகவே அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
நாம் எமது பிரதேச மக்களின் நன்மை கருதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்ற போது முதலமைச்சர் அதிகாரிகளை அச்சுறுத்தி பெரும் அபிவிருத்தித் திட்டங்களை தடைசெய்வது கன்டிக்கத்தக்க விடயமாகும். அபிவிருத்திப் பணிகள் மக்களுக்காக செய்கின்ற ஒருவிடயமாகும் இதில் மக்களே நன்மையடைவர்.
ஏறாவூர் பிரதேசத்தில் சுமார் நாற்பதனாயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் எமது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதனூடாக எமது மக்களே அதிகம் நன்மையடையவுள்ளனர். அரசியலுக்கு அப்பால் எங்களுடைய ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. இந்த நிலையில் எமது வைத்தியசாலையின் அபிவிருத்தியை தடுத்து இந்த மண்ணுக்கு முதலமைச்சர் துரோகமிழைத்துள்ளார்.
இவ்வாறான சுயநலமிக்க அரசியல்வாதிகளின் போக்கினை எமது பிரதேச சமூகமட்டத்தலைவர்கள், பொது அமைப்புக்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த மண்ணிலே அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக பொது அமைப்புக்கள் அர்ப்பணித்து செயலாற்ற வெண்டும்.
இராங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி அவர் இந்தப் பிராந்தியங்களில் பல அபிவிருத்தி பணிகளை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்ற ஒருவர் அவரோடு; இணைந்துகொண்டு இந்த ஏறாவூர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நானும் மேற்கொண்டு வருகின்றேன். அவர் இந்த ஏறாவூர் மண்ணிலும் பல அபிவிருத்திப் பணிகளுக்குச் சொந்தக்காரர்.
குறிப்பாக ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையிலே 50வீடுகளை நிர்மாணித்து ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார். வறிய மக்களுக்கு பல்லாயிரக்கணக்கான குடிநீர் இணைப்புக்களையும் வழங்கியுள்ளார். இனனும் வீடுகளையும், மலசல கூடங்களையும் இந்த மண்ணிலே வாழ்கின்ற மக்களுக்காக அமைத்துக்கொடுப்பதற்காக 2017ஆம் ஆண்டுக்கு சுமார் 2000 மில்லியன் ரூபா நிதியினையும் தனது ராஜாங்க அமைச்சுக்கு பெற்றுள்ளார்.
எனவே எமது பிரதேசத்தில் அபிவித்திப் பணிகளை மேற்கொள்கின்ற போது சமூகமட்டத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், கழகங்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பதுடன் சுயநலம் கொண்டு எமது பிரதேச அபிவிருத்திக்கு தடையாகவுள்ள துரோகிகளின் செயற்பாட்டையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த குறித்த அமைப்புக்கள் தயாராக வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.