மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
இஸ்லாம் மனித குல விமோசனத்திற்கான மார்க்கம், உலக சமாதானத்த்தித்திற்கும் சமத்துவத்திற்குமான மார்க்கம், ஒவ்வொரு விசுவாசியும் சாந்தி சமாதானத்தை பரவச் செய்யும் அழகிய "ஸலாம்" எனும் வாழ்த்தைக் கொண்டே உறவுகளை தொடர்புகளை உயிர்பிக்குமாறு வேண்டப் பட்டுள்ளனர்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலக நாடுகளின் அமைதி சமாதனத்திற்கு எதிரான தீய சக்திகளாக காட்டுவதற்கான பரப்புரைகளை "இஸ்லாமோபோபியா" எனும் பாரிய பில்லியன் டாலர் வேலைத் திட்டத்தினூடாக இஸ்லாத்தின் எதிரிகளால் சர்வதேச அரங்கில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
எமது அழகிய தேசத்தின் சமாதான சகவாழ்வை இலக்கு வைத்து இன்று கூலிப் படைகள் களமிறக்கப் பட்டுள்ளனர், சிலர் அறிந்தும்,பலர் அறியாமையினாலும் அந்த சர்வதேச சதி வலைப்பின்னலில் சிக்கியுள்ளனர்.
மேற்படி சதி வலைகளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதனை விடவும் பெரும்பான்மை சமூகங்களை பாதுகாக்கின்ற மிகப் பெரும் பணி எம்மீது சுமத்தப் பட்டுள்ளது.
அரசியல் தலைமைகள், சன்மார்கத் தலைமைகள், சிவில் தலைமைகள் அவற்றை பார்த்துக் கொள்வார்கள் என எந்தவொரு முஸ்லிமும் இஸ்லாமிய நிறுவனமும் இஸ்லாமிய அமைப்புக்களும் பார்வையாளர்களாக மாத்திரம் இருந்து விட முடியாது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் எதிராக முன்வைக்கப் படுகின்ற தப்பபிப்பிராயங்களை களைவதும் அதன் மூலம் உயரிய இஸ்லாமிய வாழ்வு நெறியை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், இலத்திரணியல், பதிப்பு, மற்றும் சமூக ஊடகங்களை உயரிய பணிக்காக பயன்படுத்துவதும் யுகத்திற்கான அறப்பணி எனும் ஜிஹாத் ஆகும்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, RRT, ARC போன்ற அவசர சட்ட உதவி சேவைகள் அமைப்புக்கள், தேசிய ஷூரா சபை போன்ற தேசிய அமைப்புக்களுக்கு பூரணமாக உங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள், பிற நாடுகளில் வசிப்போர் அவற்றின் பணிகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்க முன்வாருங்கள்.
சமூகத்தின் பாலும் தேசத்தின் பாலும், இஸ்லாத்தின் பாலும், உம்மத்தின் பாலும் உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது, அதுபற்றி இன்மையிலும் மறுமையிலும் தனித்தனியாக பொறுப்புகூறியே ஆதல் வேண்டும்.
மேற்படி தலையாய தார்மீக கடமைகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்ற அல்லது விரண்டு ஓடுகின்ற அல்லது ஓடி ஒழிகின்ற மனநிலை வந்து விடாது எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும்.
சோதனைகள் வரும் பொழுது ஒவ்வொரு விசுவாசியும் தனித்தனியாக சோதிக்கப் படுகிறார் என்பதனை நங்கள் மனதில் கொள்ள வேண்டும். பங்காளர்களாக அன்றி பார்வையாளர்களாகவும், விமர்சகர்களாகவும், விரல் நீட்டுபவர்களாகவும் நாங்கள் இருந்து விடக் கூடாது.
சவால்களைக் கண்டு அஞ்சவோ நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை. இடத்தால் மாத்திரமல்ல காலத்தாலும் தொலைவில் உள்ள நமது உறவுகள் குறித்த அதிகபட்ச கரிசனையுடன் ஒவ்வொரு பொழுதையும் நாம் பொறுப்புணர்வுடன் கழித்தல் வேண்டும்.
சவால்களைக் கண்டு அஞ்சவோ நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை, மாறாக அவற்றிற்கு பொறுப்புணர்வுடன் நாம் முகம் கொடுக்க வேண்டும். நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எமது உறவுகள் குறித்த கரிசனை போன்று எதிர்கால சந்ததியினர் குறித்தும் நாம் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும்.
ஷைத்தான் எமக்கு மத்தியில் பிளவுகளை பித்தனாக்களை உருவாக்கவும், ஏனைய சமூகங்களுடனும் பித்தனாக்களை உருவாக்கவும் வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றான். அமைதி, சமாதானம், சகவாழ்வு, பெருந்தன்மை, சகிப்புத் தன்மை, பொறுமை எதுவுமே மனிதனிலும் ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களுக்கு ஒவ்வாத விடயங்களாகும்.
இன்று கிழக்கில் பொறுமை காத்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது முதிர்ச்சியை பொறுப்புணர்வை, தேசப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். நிகழ்வுகளால் உந்தப்பட்டு நெறி தவறி விடாது அவற்றிற்குப் பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல்கள் குறித்து இந்த நாட்டில் உள்ள மூன்று சமூகங்களும் மிகவும் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை உற்பட்ட தத்தமது பிரதேசங்களில் உள்ள அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளுடன் இணைந்து பொறுப்புணர்வுடன் தலைமத்துவக் கட்டுக் கோப்பை பேணி சகலரும் நடந்து கொள்ள வேண்டும்.
தீவிர வாதிகளை எதிர்வினைகளால் உருவாக்கல் :
தீய சக்திகளுக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் எல்லா சமூகங்களிலும் நல்லவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான்.
இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றிய பீதியை சந்தைப் படுத்துவதன் மூலம் தமது சமூகத்தில் உள்ள பலவீனமான அறியாமையில் உள்ளவர்களை வீதிக்கு கொண்டுவருவது அவர்களது மூலோபாயம்.
சமூக ஊடகங்கள் ஊடாக அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கு நாம் போதிய விளம்பரத்தை கொடுப்பது அவர்களது பணியை இலகுவாக்குகிறது.
நாம் உணர்ச்சிவயபட்டு மேற்கொள்கின்ற பதிவுகள் அல்லது பகிர்வுகள் மற்றும் எதிர்வினையாற்றல்கள் மூலம் அவர்கள் தமது தரப்பு ஆளணியை உசுப்பேற்றி திரட்டிக் கொள்கின்றார்கள்.
அவர்கள் காழ்புணர்வுப் பரப்புரைகளை முழுநேர தொழில்துறையாக செய்து கொண்டிருக்கின்றார்கள், எமது எதிர்வினைகள் அவர்களது அறுவடைகள்.
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பதிவுகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளாது அவற்றை Report செய்துவிடுங்கள்.
கவலை வேண்டாம், அச்சம் வேண்டாம்,சவால்களை சந்தர்பங்களாக மாற்ற முன்வாருங்கள்.
வாழ்க்கையில் தனி மனிதர்களாக, குடும்பங்களாக, சமூகங்களாக நாங்கள் இன்னோரன்ன சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம்,சவால்ககளுக்கு முறையாக முகம் கொடுப்பது தான் வாழ்க்கை.
வெளியிலிருந்து விடுக்கப் படும் சவால்கள் கண்டு நிலை குழைந்து போவது அல்லது அஞ்சுவது, நம்பிக்கை இழந்து விடுவது உண்மை விசுவாசிகள் பண்பாக இருக்க முடியாது.
இன்றைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை அல்லது அச்சம், சவால்களுக்கு முன்னால் நாங்கள் வெவ்வேறு அணிகளாக பிரிந்திருப்பதும், உள்வீட்டில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் தான்.
எமது அரசியல் தலைமைகள் என்ன செய்கிறார்கள் ஏனைய சிவில், சன்மார்கத் தலைமைகள் என்ன செய்கிறார்கள் கூட்டாக என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்கள் இன்னும் புதிர்களாகவே இருக்கின்றது.
ஊர் மட்டங்களில் கூட நாம் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்று கூடிப் பேசுகின்ற மஷூரா செய்கின்ற ஒழுங்குகளையாவது செய்யாது ஒருவகை ஸ்தம்பித நிலையில் இருக்கின்றோம்.
இலங்கையில் உள்ள இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் தமது அறிவு, பெற்ற பயிற்சிகள்,சமூக கரிசனை, தலைமைத்துவ பண்புகள், கட்டுக் கோப்பு என்பவற்றை பிரயோகித்து அடிமட்ட (ஊர்) தலைமைத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொழும்பில் உள்ள தலைமைகள் அல்லது மஸ்ஜித் பரிபாலனங்கள் தான் இவற்றை வந்து செய்து தர வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது, ஊரில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள், புத்திஜீவிகள் ஒன்றாக அமர்ந்து பேசும் நிலை இன்னும் வரவில்லை
தொழுவதற்கு ஒன்று கூடும் நாம், நோன்பு காலங்களை ஹயாத்தக்க ஒன்று கூடும் நாம், சகாத் சதகாவை சேர்த்து பகிர்ந்தளிக்க ஒன்று கூடும் நாம், ஜும்மாவிற்கு ஒன்று கூடும் நாம் எமது இருப்பு பாதுகாப்பு குறித்த அடிப்படை அம்சத்திற்காக ஒன்று கூடுவதை ஏன் பர்ளு ஐன் ஆக பார்க்காது வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஐக்கியமும், ஒழுங்கும், கட்டுக்கோப்பும், கூட்டுப் பொறுப்பும் இல்லாத ஒரு சமூகம் ஏனைய சமூகங்களை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. வெளியில் இருந்து வரும் சவால்களை விடவும் உள் வீட்டில் இருந்து வரும் சவால்களே எமக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும் என்றால் தீயையே கொளுத்திவிட பலரும் காத்திருக்கிறார்கள்.