ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார். செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துள்ளதாகவும், இதன் பொருட்டு ஹசனலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் சம்மதித்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக, கடந்த பொதுத் தேர்தல் காலத்திலேயே, நான் உறுதி வழங்கியிருந்தேன். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஹசனலி விருப்பம் கொண்டிருந்தார். ஆயினும் ஹசனலியின் சொந்த ஊரான நிந்தவூரில், மு.கா. சார்பாக பைசால் காசிம் போட்டியிடவிருந்தார். எனவே, ஹசனலியிடம் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று நான் கூறியதோடு, அவருக்கு தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதியளித்திருந்தேன் என்றார்.
இதற்கிணங்க, எதிர்வரும் 09 ஆம் திகதி மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாமா செய்யும் வெற்றிடத்துக்கே, ஹசனலி பதவியேற்கவுள்ளார். இதேவேளை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்பதை அந்தப் பிரதேசத்தின் கட்சிப் பிரமுகர்களான எஸ்.எல்.எம். பளீல், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், யு.எல் வாஹிட், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எல். நபீல் உள்ளிட்டோர் வலியுறுத்திப் பேசினர்.
"அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் வழங்குவேன் என்று மிகவும் பகிரங்கமாக கடந்த காலங்களில் வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். ஆனாலும் இப்போது பொதுச் செயலாளர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதற்குக் காரணம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக ஹசனலிக்கும் நீங்கள் வாக்களித்ததாக சொல்கிறீர்கள்.
அப்படியாயின் அட்டாளைச்சேனைக்கு எப்போதாவது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்று கூறுங்கள். அதுவும் இல்லாது விட்டால் அட்டாளைச்சேனைக்கு வழங்க முடியாது என்றால், அதையாவது வெளிப்படையாகக் கூறுங்கள். அந்த ஊர் மக்களிடம் நாங்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டியுள்ளது" என்று, மு.கா. தலைவரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் உயர்பீடத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.
ஆனாலும், ஹக்கீம் இதற்கு எவ்வித பதிலையும் வழங்காமல் மௌனமாகவே இருந்துள்ளார்.
விடிவெள்ளி