க.கிஷாந்தன்-
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டகளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு முதல் மலர்மாலையை முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் அணிவித்தார்.
இதனையடுத்து அதிதிகள் நினைவுச்சுடர் ஏற்றியதுடன், அங்கு கலந்து கொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.