எம்.வை.அமீர்-
அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் களமிறங்கவுள்ள நாபீர் பௌண்டேசன், சம்மாந்துறை பிரதேச சபையை முழுமையாக கைப்பற்றுவதுடன் கல்முனை மாநகரசபையின் மூன்றுக்குக் குறையாத உறுப்பினர்களைப் பெறும் என்றும் ஏனைய சபைகளிலும் உறுப்பினர்களைப் பெறுவோம் என்று நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
நாபீர் பௌண்டேசனின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு சம்மாந்துறையில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் 2017-01-27 ஆம் திகதி ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் தலைமையில் அமைப்பின் ஊடக இணைப்பாளர் அஷ்ரப்கானுடைய வழிகாட்டலில் இடம்பெற்றது.
கடந்த 23 வருடங்களுக்கு மேலாக மக்களின் குறைகண்டு அதற்கான நிவாரணம் வழங்கும் சமூக சேவையாற்றிவரும் நாபீர் பௌண்டேசன், தனது சக்திக்கு ஏற்ப வேலைவாய்புக்களையும் வழங்கியுள்ளது. இதேவேளை இன்னும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இனம்கண்டுள்ளது. இவ்வாறான மக்களின் தேவைகளை நிவர்த்திக்குமாறு பல்வேறு ஊடக அழுத்தங்களை நாபீர் பௌண்டேசன் அரசியல்வாதிகள் மீது கொடுத்தபோதும் அவர்கள் அம்மக்களின் அவலங்களை கண்டுகொள்வதாக இல்லை. இதன்காரணமாகவும் மக்களும் கல்வியலாளர்களும் நாபீர் பௌண்டேசனுக்கு தேர்தல்களில் களமிறங்குமாறு பிரயோகிக்கும் அழுத்தங்கள் காரணமாகவுமே எதிர்காலத்தில் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் களமிறங்வுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல்களில் தனித்தே போட்டியிட உத்தேசித்துள்ளதாக தெரிவித்த நாபீர்,சில கட்சிகள் இணைந்து செயற்பட அழைப்புவிடுப்பதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் அநேக சபைகளுக்கு வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சிறந்த, மக்களிடம் செல்வாக்குள்ள வேட்பாளர்களை இனம்கண்டுள்ளதாகவும் அவர்கள் ஏனைய கட்சிகளால் நிறுத்தப்படுவோருக்கு மிகுந்த சவாலாக அமைவார்கள் என்றும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது நாபீர் பௌண்டேசனின் சம்மாந்துறை மத்தியகுழுவின் தலைவர் கே.எல்.அபூசாலி மற்றும் உபதலைவர் எம்.எஸ்.எம்.றியால் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அத்துடன் அமைப்பின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஸாதிக் எஸ். முஹம்மட் மற்றும் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் ஜிப்ரி உதுமாலெவ்வை கலந்து கொண்டிருந்தனர்.