முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தளையிலும் ஹம்பாந்தோட்டையிலும் பாரியளவில் காடுகளை அழித்த போது அமைதியாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் வில்பத்துவில் மீள் குடியேறுவதை எதிர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயலாகும். அவர்கள் காடுகளை அழிக்கவில்லை. தாங்கள் காணிகளையே துப்பரவு செய்துள்ளார்கள் என சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் வில்பத்து மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் 24 மணி நேர அறிவித்தலில் முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முஸ்லிம் பெண்களின் காதுகளில் இருந்த தோடுகளையும், கழுத்திலிருந்த மாலைகளையும் பறித்துக் கொண்டே விரட்டினார்கள். வடக்கில் கோடீஸ்வரராக இருந்த முஸ்லிம்கள் வெற்றுக் கைகளுடன் அகதிகளாக வெளியேறினார்கள்.
இன்று வில்பத்து விவகாரத்தில் குற்றம் சுமத்தப்படும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் வடக்கிலிருந்து அகதியாக வந்து புத்தளத்தில் அகதி முகாமில் குடியேறினார். உணவுக்காக வெற்றுப் பீங்கானுடன் பாணுக்காகவும், தேங்காய் சம்பளுக்காகவும் வரிசையில் நின்றார் அவர். அமைச்சர் ரிசாத்துடன் அகதிமுகாமில் வாழ்ந்தவர்கள் இன்று அவரிடமே உதவி கோருகிறார்கள். அவர்களுக்கு உதவுவது அவரது கடமையாகும். அதனாலேயே வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விவகாரத்தில் ரிசாட் பதியுதீன் உதவிகளை செய்கிறார். முஸ்லிம்கள் வில்பத்து வன சரணாலயத்தில் மீள் குடியேற்றப்படவில்லை.
கரணாலயத்துக்கு அப்பால் அவர்களுடைய பூர்வீக காணிகளிலேயே மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இக் குடியேற்றத்தை காடு அழிப்பாகவும், வில்பத்து ஆக்கிரமிப்பாகவும் இனவாதமாகவும் பார்ப்பது தவறானதாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதும் மீள் குடியேற்றுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.