பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாணத்திலுள்ள சகல இறைச்சிக் கடைகளும் கால்நடைகளுக்கு விழா எடுக்கும் பட்டிப்பொங்கல் தினத்தன்று மூடப்பட வேண்டுமென கோரி, வடக்கு மாகாண சபையில் தனிப்பட்ட பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால், நேற்றைய வட மாகாண சபை அமர்வில் இதுகுறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூய பசும்பாலையும் இரசாயன தீங்கில்லாத இயற்கை பசளையையும் உழவுத் தொழிலுக்கு கைகொடுப்பதுமான கால்நடைகளை, அவற்றிற்கு விழா எடுக்கும் நாளில் இறைச்சிக்காக கொல்வது முரணான செயற்பாடாக உள்ளதென ஐங்கரநேசன் தமது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆண்டுதோரும் பட்டிப்பொங்கல் தினத்தன்று வட மாகாணத்திலுள்ள சகல இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டுமென கூறி குறித்த பிரேரணையை முன்மொழிந்ததோடு, சகல உறுப்பினர்களது ஆதரவுடனும் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.