மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினையாக வில்பத்தினை அண்டிய முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசமான மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி , கொண்டச்சி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான எல்லாவிதமான ஆதாரங்களும் இருக்கின்ற போதிலும் மீள்குடியேற்றம் பூரணமாக நடைபெறவில்லை என மன்னார் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (05) அன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் காரியாலயத்தில் அமைச்சரை சந்தித்த மன்னார் மாவட்ட பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை தெளிவு படுத்தினர்.
நாங்கள் தொடர்ச்சியாக இன்னும் அகதிமுகாம்களில் வாழ்கின்ற அவலநிலையே காணப்படுகின்றது. எமது மீள்குடியேற்றமானது நீருபூத்த நெருப்பாகவே இருக்கின்றது. எமது பூர்வீக நிலத்தில் வாழ எமக்கும் ஆசையாகவே இருக்கிறது அங்கே நாங்கள் வாழ்ந்தமைக்கான எல்லாவிதமான ஆவணங்களும்,ஆதாரங்களும் எம்மிடம் இருந்தும் எமது மீள்குடியேற்றமானது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.பல்லாண்டு காலமாக நாம் எதிர் நோக்கும் இந்த அவலம் தீர நீங்கள் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசி தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்போது கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்தப் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வை பெற்றுத் தருவதற்கான பொறிமுறைகளை ஆராய்ந்து விரைவில் அதனை செயற்படுத்துவதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாவா பாறூக் மற்றும் ஹுனைஸ் பாறூக் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.எம்.றயிஸ், உயர்பீட உறுப்பினர் தமீம் உட்பட வன்னி மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.