புதிய தேர்தல் திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றிருந்தால் பழைய விகிதாசார முறைப்படியே தேர்தல் நடத்தப்படும் என்றை ஐ தே க செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிமின் கருத்தை உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே சிறுபான்மை மக்களின் அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளது.
கட்சித்தலைமை காரியாலயத்தில் நடை பெற்ற ஆதரவாளர் சந்திப்பில் உலமா கட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
புதிய தேர்தல் மாற்றத்துக்கான முழு முயற்சியையும் கடந்த ஆட்சியில் ஹெல உறுமயவே மேற்கொண்டது. இது விடயத்தில் உலமா கட்சிக்கும் ஹெல உறுமயவுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டன.
இந்த அரசின் பங்காளியாகவும் இருக்கும் ஹெல உறுமயவே இது விடயத்தில் விடாப்பிடியாக இருக்கிறது. அக்கட்சியின் முழு நோக்கமும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் குறைக்க வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில் இது விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை மக்கள் பற்றி கரிசணை கொண்டதாக தெரியவில்லை. அரசுக்கு ஆதரவான சிறுபான்மை கட்சித்தலைவர்களான அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ஹக்கீம் போன்றோரின் கூட்டு கோரிக்கையைக்கூட இன்னமும் அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. புரிந்திருந்தால் மேற்படி தேர்தல் முறை பற்றிய முயற்சியை அரசு ரத்து செய்திருக்கும்.
இது விடயத்தில் தேர்தல் முறை மாற்றம் என்பது ஜனாதிபதியின் தேர்தல் வாக்கு என தூக்கிப்பிடிப்பது முறையானதல்ல. காரணம் ஜனாதிபதியில் தேர்தல் வாக்குறுதிகள் பல காற்றில் பறந்து விட்டன என்பதே உண்மையாகும். இனங்களுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவோம் எனக்கூறிய ஆட்சியில் மஹிந்த காலத்தை விட மோசமான நிகழ்வுகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்கிறார்கள்.
ஆகவே ஜனாதிபதி தேர்தல் முறை பற்றிய விடயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுப்பதுடன் மைத்ரியை ஆட்சிக்கு கொண்டு வந்த ஐ தே க சிறுபான்மை மக்களுக்கு பாதகமான புதிய தேர்தல் முறையை ரத்துச்செய்ய ஜனாதிபதியை பணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.