ஏ.எச்.சித்தீக் காரியப்பர் (சிரேஸ்ட ஊடகவியலாளர்)-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் எம்.பி ஒருவரை நியமிப்பது தொடர்பில் கட்சியின் தலைமையும் முக்கியஸ்தர்களும் கவனம் செலுத்தியுள்ளதாக கட்சியின் நம்பகமான வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தன.
இதன்படி, தற்போது திருமலை மாவட்டத்துக்கான தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ள தௌபீக் எம்.பியை இராஜினாமாச் செய்யச் செய்து அந்த வெற்றிடத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது தொடர்பில் தற்போது கட்சியின் உயர்மட்டத்தில் கலந்தாலோசிக்கப்படுவதாகவும் நம்பகமான அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உடடினடியாக இதனைச் செய்ய முடியாத நிலை தற்போது எழுந்துள்ளதால் 6 மாதங்களின் பின்னர் அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவர் தெளபீக்கின் இடத்துக்கு நியமிக்கப்படவுதாகவும் தெரிவித்தன.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலியை தொடர்பு கொண்டு நான் கேட்ட போது, அட்டாளைச்சேனை மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைமையே தீர்மானிக்க வேண்டும். இரண்டு தேசியப்பட்டியல் (சுழற்சி முறை) எம்பிக்கள் உள்ளனர். எனவே, இது தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியும்தானே? என மிக சூசகமாக என்னிடம் தெரிவித்தார். அத்துடன் நாளைய கூட்டத்தில் தான் கட்டாயம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இன்று (02) திங்கட்கிழமை இரவு நடத்த திட்டமிட்டுள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது காலம் தாழ்த்தப்படாமல்; விரைவாக வழங்கப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் இது தொடர்பில் மு.கா தலைமைத்துவம் செயற்படாது போனால், இப்பிரதேசத்தைச் சேர்ந்த 06 உச்ச பீட உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்து, அஹிம்சாவழி போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது தெரிந்ததே.