பயிஸர் முஸ்தபா |
கால் நடைகளின் நலன் பேணும் குழுவொன்றை அமைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று அமைச்சின் கேற்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இக்கூட்டம் தெருநாய்கள் குறித்த வேலைத்திட்டம் ஒன்றினை திட்டமிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிலதாரிகள் உள்ளடங்களாக குறித்த குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் கால் நடைகளின் நலன் பேணும் அமைப்புக்களின் கருத்துக்களை பெற்று குறித்த குழுவுக்கான பொறுப்புக்கள் பகிந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் பாடசாலை, வைத்தியசாலை, பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகாமையில் நடமாடும் தெரு நாய்களினால் பொது மக்கள் அன்றாடம் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தினமும் உள்ளூராட்சி நிருவனங்களுக்கு முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவே இந்த குழு அமைக்கப்படுகின்றது என்றும் நாய்களை தெருக்களில் கொண்டு வந்து விடுகின்றவர்களுக்கு சீ சீ டி வி கமெராக்களின் உதவியோடு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்க உள்ளதாகவும் மேலும் அமைச்சர் தெரிவித்ததோடு கால் நடைகளின் நலன் பேணும் குழுவுக்கான ஆலோசனைகளை வழங்குமாறும் கால் நடைகளின் நலன் பேணும் அமைப்புக்களிடம் வேண்டிக்கொண்டார்.
அமில பாலசூரிய