ஷபீக் ஹுஸைன்,பிறவ்ஸ் முஹம்மட்-
கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்று (23) அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பணிப்புரை விடுத்தார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டங்களை மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்), ஐ.எல்.எம். மாஹிர், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, ஏ.எல்.எம். முஸ்தபா, முஹம்மத் பிர்தௌஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.சி. யஹியாகான், அமைச்சின் செயலாளர் என்.டி. ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர் எம். முயினுத்தீன், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், மேல் மாகாண, பெருநகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி மீள்நிரப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.