சுத்தமான குடிநீரின்மையால் அதிகமானோர் சீறுநீரக நோய்க்கு ஆளாகும் நிலை அமைச்சர் ஹக்கீம்




பிறவ்ஸ் முஹம்மட்-

1000 லீற்றர் குடிநீரை சுத்திகரிப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு 48 ரூபா செலவாகிறது. ஆனால், அதை நாங்கள் வெறும் 12 ரூபாவுக்கே மக்களுக்கு வழங்கிவருகிறோம். இதனை 18 ரூபாவாக அதிகரிப்பதற்கு நாங்கள் முயற்சித்தபோது ஊடகங்கள் அதற்கெதிராக பிரசாரங்களை மேற்கொண்டு விலை அதிகரிப்பை இடைநிறுத்தியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிகன்ஹல்மில்லாவ, துருக்கராகம, யக்கல்ல, படிக்கராமடுவ பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (RO Plant)நேற்று வியாழக்கிழமை (19) வழங்கிவைத்த பின்னர், துருக்கராகம ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாங்கள் ஒரு லீற்றர் குடிநீரை 1 சதத்துக்கும் குறைவாகவே வழங்கிவருகின்றோம். ஆனால், மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை 50 தொடக்கம் 60 ரூபா வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். ஆனால், 48 ரூபா செலவாகும் குடிநீரை 18 ரூபாவுக்கு வழங்க முற்படும்போது அதற்கெதிராக ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், குடிநீர் விலை அதிகரிப்பை ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை சமாளிப்பதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறானதொரு கூற்று. இந்த சிறிய விலை அதிகரிப்பின் மூலம் நீர்வழங்கலை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்திருந்தோம்.

சுத்தமான குடிநீரின்மையால் வட மத்திய மாகாணங்களிலுள்ள கிராமங்களில் அதிகளவானோர் சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ளனர். கடந்த 15 வருட காலத்துக்குள் வடமத்திய மாகாணத்தில் 15,000 பேர் சிறுநீரக நோயினால் மரணமடைந்துள்ளனர். தற்போது இந்த மாகாணத்திலுள்ள சுமார் 15,000 பேருக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திகொண்டு ஜனாதிபதியின் திட்டத்தின்படி எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வடமத்திய மாகாணத்திலுள்ள 90 வீதமான பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

சுத்தமான குடிநீரின்மையால் சீறுநீரக நோய்க்கு ஆளாகும் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்படைகின்றன. சிறுநீரக நோய்க்குள்ளாகினால் இருவித சிகிச்சைகளை செய்யவேண்டியுள்ளது. ஒன்று வாரத்துக்கு ஒரு தடவை இரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டும். இதற்கு 1 வாரத்துக்கு 8,000 ரூபா வீதம் மாதத்துக்கு 32,000 ரூபா செலவாகிறது. பின்தங்கிய மற்றும் சாதாரணதர குடும்பங்களுக்கு இது ஈடுகட்டமுடியாத ஒரு தொகையாகும். அடுத்தது, சிறுநீரக மாற்று சிகிச்சையாகும். இதற்கு பல இலட்சங்கள் செலவாகுவதால், சாதரண மக்களுக்கு இதுவும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது.

தொற்றாநோய்களில் மிகவும் அபாயகரமான இந்த சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி 150 பில்லியன் ரூபா என்ற பெரியதொரு தொகையை, பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் ஒதுக்கியுள்ளார். இதன் அங்கமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் சுழு Pடயவெ தொகுதிகளை வழங்கி நிறுவி வருகின்றோம். 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுழு Pடயவெ மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் 5,000 குடும்பங்கள் பயனடையவுள்ளன. இவை மக்கள் மயப்படுத்தப்பட்ட உள்ளுர் அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அரபு நாடுகளில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகித்து வருகின்றனர். இதற்கு பெருமளவிலான பணம் செலவாகிறது. பெற்றோலிய வளமிக்க இந்த நாடுகளுக்கு இந்த செலவு பெரிதாக இருக்காது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில் அவ்வாறானதொரு சூழல் இல்லாத காரணத்தினால் நாங்கள் நன்னீரையே சுத்திகரித்து குடிநீராக வழங்கி வருகின்றோம். தற்போது நிலவும் வரட்சியினால் நன்னீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போதுள்ள நிலவும் வரட்சியை கருத்திற்கொண்டு மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தவேண்டும். குடிநீரை தோட்டங்களுக்கு பாய்ச்சுதல், வானங்களை கழுவுதல் போன்ற விடயங்களுக்காக பயன்படுத்துவதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள வரட்சிக்கு ஈடுகொடுப்பதற்காக அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான், வடமத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹம்மட், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். ரயீஸ், அமைப்பாளர் மௌலவி முபாறக், பதுளை மாவட்ட அமைப்பாளர் தாஜுதீன், வடமத்திய மாகாணசபை நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் வஜிர விஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -