வில்பத்து தொடர்பில் உண்மையைப் போட்டுடைத்த மஹிந்த..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
வில்பத்து சரணாலயத்துக்கு முஸ்லிம்கள் எவ்வித சேதத்தையும் எற்படுத்தவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். நேற்று (11) புதன்கிழமை டுவிட்டர் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பேட்டியில் வில்பத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

வில்பத்து பாதுகாப்பு வலயத்துக்கு எந்த விதமான சேதமும் ஏற்படுத்தப்படவில்லை. என்னுடைய ஆட்சிக் காலத்தின் பொழுது வில்பத்து எல்லைக்கு அப்பால் உள்ள காணிகளை மன்னாரில் இருந்து வந்த அப்பாவி முஸ்லிம்களை, புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகளை என்னுடைய அரசாங்கம்தான் செய்தது. அன்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஆளணி அமைத்து குறித்த நிலங்களை இனங்கண்டு, அளந்து அவர்கள் குடியேறுவதற்காக வேண்டிய வசதிகளை என்னால் செய்து கொடுக்க முடிந்தது. அதற்கப்பால் யாராவது காடுகளை அழித்தார்கள் என்று வனப் பாதுகாப்பு சொல்வார்களேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனை றிஷாத் பதியுதீன் அமைச்சரே கூறியிருக்கின்றார்.

எனவே வீடு வாசல்களை இழந்து கையில் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வந்த அப்பாவி மக்ககளுக்கு இன்னல் விளைவிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொன்னார்.

எனக்கும் இன விரோதத்தை தூண்டுபவர்களுக்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் ஓர் இன விரோதியும் இல்லை. எல்லா விடயங்களையும் ஒன்றுபோல் கவனிக்கக் கூடியவன். உண்மையிலே அன்றும் இன்றும் நான் இந்த நாட்டு முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாக வாழப் பழகிக் கொண்டுள்ளேன். எனவே எந்தவிதமான வன்செயலுக்கும் இடம் கொடுப்பதற்கு என்னுடைய செயற்றிட்டத்தில் இடம் இல்லை. இனத்துவேசத்தை நான் முற்றாக வெறுக்கின்றேன்.

தொடர்ந்து கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில்,

வீமல் வீரவன்சவை கைது செய்யப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது,

தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடை பெறவிருக்கின்றது. அதிலிருந்து தடுப்பதற்காகவும் அத்தோடு, 27ஆம் திகதி நுகேகொடை கூட்டத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொள்ள இருந்தார். அதனைத் தடுப்பதற்காகவும்தான் அவரை கைது செய்தனர். அவர் கைது செய்த நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நாமல் ராஜபக்ஷவை குறி வைத்து அவரைத் தாக்க வேண்டும் என்றும் பொலிஸுக்கு பணிப்புரை வழங்கியிருந்தது. ஆனால், தெய்வாதீனமாக நாமல் ராஜபக்ஷ தப்பி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து ஏனையவர்களோடு வெளியே வந்தார். அவரை அடிப்பதற்கு பொலிஸார் ஒருவர் கையைத் தூக்கியபோது இன்னொரு பொலிஸார் அதனை மிகவும் சாமர்த்தியமாக தடுத்து நாமல் ராஜபக்ஷவை காப்பாற்றினார். இது குறித்து வாசுதேவ நாணயக்கார மிகவும் சுவாரஷ்யமாக என்னிடம் பேசினார். அன்று வாசுவும் நானும் இப்படியான போராட்டங்களில் ஹம்பாந்தோட்டை முதல் கொழும்புவரை ஈடுபட்டோம். இப்போது நான் விலகி இருக்கின்றேன். “உங்களுடைய மகனும் நானும் அடி வாங்குகிற நிலைக்கு வந்திருக்கின்றது. அன்று அப்பா செய்ததை இன்று என்னுடன் சேர்ந்து மகன் செய்கின்றார்.” என்று அவர் என்னிடம் கூறினார்.

சம்பூர் காணிகளை வெளிநாட்டினருக்கு விற்பதற்கு நீங்கள் இணங்கியது ஏன் எனக் கேட்ட போது,

சம்பூர் காணிகளை வெளிநாட்டவர் எவருக்கும் நாம் விற்கவில்லை. அன்று மின்அணு திட்டத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டித்தான் இந்த நிலத்தை இந்தியர்களுக்கு நாங்கள் வழங்கினோம். இந்த நாட்டில் எந்தத் துண்டுக் காணியையும் வெளிநாட்டினருக்கு விற்பதை நாங்கள் வெறுக்கின்றோம். இந்த நாடு அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் தத்தமது நிலங்களில் சகல வாழ்வாதார வசதிகளைப் பெற்று வாழ்வதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகின்றேன்.

சிங்கள, தமிழ் மொழி சம்பந்தமாக எதிர்காலத்தில் அமையவிருக்கின்ற உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டகேள்விக்கு பதிலளிக்கையில்,

சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது அரசியல் சாசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அதிலிருந்து நாங்கள் விலகிச் செல்ல வேண்டிய தேவையும் இல்லை. எனினும் சமஷ்டி முறை ஆட்சியை நாம் எதிர்க்கின்றோம். இலங்கையில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற கோட்பாட்டில்தான் எனது செயற்றிட்டங்கள் அமைந்திருக்கின்றன.

சீனாவுக்கு விற்கப்படுகின்ற நிலங்கள், ஹம்பாந்தோட்டைக் காணிகளைப் பற்றி கேட்ட போது,

இது குறித்து நான் சீன உயர்ஸ்தானிகரிடத்தில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் அமைக்கவிருக்கின்ற கைத்தொழில்பேட்டைக்கு உரிய காணி, நிலங்களை நாங்கள் நிர்ணயித்து வழங்கியிருக்கின்றோம். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்கி அவர்கள் இப்போது நிம்மதியாக அந்தந்தப் பகுதிகளில் குடியேறியிருக்கின்றார்கள். ஆனால், இன்று துரதிஷ்டவசமாக 15ஆயிரம் ஏக்கரை உடனடியாக எடுத்து அந்தந்த கிராமங்களில் உள்ள அவர்களது வாழ்வாதார இடங்கள், கோயில்கள், பள்ளிகள் போன்றவற்றையும் அழிப்பற்குரிய ஒரு திட்டத்தை இந்த அரசாங்கம் மிகவும் மூடத்தனமாக செய்து வருவதைத்தான் இந்த நாட்டிலே அனைவரும் எதிர்க்கின்றனர்.

நீங்கள் ஏன் இவ்வளவு இளமைத் துடிப்போடு இருக்கின்றீர்கள் என்று உலக ஊடவியலாளர்கள் வியப்போடு வினா எழுப்பியதற்கு?

அதற்கு காரணம் மக்களுடைய ஆசிர்வாதம் ஒன்றுதான் என்று மஹிந்த ராஜபக்ஷ தனது இயற்கையான புன்னகை பூத்த முகத்தோடு கூறினார். 

அண்மையில் நீங்கள் சென்ற சீன விஜயம் தொடர்பாகக் கேட்ட போது,

சீன விஜயத்தின் மூலம் நான் வேண்டுகோள்களை அவர்களிடம் விடுத்தேன். இலங்கைக்கு உல்லாசப் பயணிகளை ஏராளமாக அனுப்புங்கள். அத்தோடு, சகல உதவிகளையும் நாட்டின் அபிவிருத்திக்காக வேண்டி செய்யுங்கள் என்றும் கூறியிருக்கின்றேன். நான் எங்கு சென்றாலும் எமது நாட்டின் நலனுக்காகவே செயற்படுவேன். அதற்கு மாற்றமாக இலங்கைக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாமென்ற நாட்டுப்பற்றற்றவர்கள் கூறுவதைப் போல் நான் ஒரு காலமும் பேசவும் மாட்டேன். செயற்படவும் மாட்டேன். நாட்டின் வளத்தைக் கூட்டுவதற்காகத்தான் எல்லா நாட்டு தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுப்பது எனது வழக்கமாகும்.

வாலிபர்கள் நீலஅணி தொடர்ந்து செல்லுமா எனக் கேட்ட போது,

நீலஅணி மட்டுமல்ல, பச்சை, சிவப்பு, ஊதா போன்ற எல்லா நிறங்களைச் சேர்ந்த வாலிபர்களையும் நாம் அனைத்துச் செல்வோம். உண்மையிலே வாலிபர் பட்டாளத்தை அமைப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். என்றும் அவர் இதன் போது கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -