கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் |
ஊடகப்பிரிவு-
அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களுடைய காணிகளைப் படையினரும் சில சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சூரையாடி, அவற்றைப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்குவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்களென, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி விட்டுத்திட்ட குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதி வழங்கும் வைபவம், சின்னப்பாலமுனை அல்- ஹிக்மா வித்தியாலயத்தில் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில் தலைமையில் சனிக்கிழமை (07) மாலை நடைபெற்றது.
இதில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரமான ரவூப் ஹக்கீம், மத்திய அரசாங்கத்தில் முக்கியமான பதவியில் உள்ளவர். மூவின மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றார். இவருடைய கரத்தை நாம் எல்லோரும் ஒற்றுமையாகப் பலப்படுத்த வேண்டும்.
கட்சித் தலைமையை விமர்சிக்காது நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு, இவ்வாறான பணிகளை பெற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும். ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஒரு பகுதியில் மரம் நடுதல் எனும் போர்வையில் பெரும்பான்மையினருக்கு காணி வழங்கப்பட்டமையடுத்து, நானும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கலந்துரையாடியதுக்கினங்க, அவற்றை உடனடியாகத் தடை செய்வதாக, அரசாங்க அதிபர் எங்களிடம் உறுதியளித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள், எமது மக்களுக்குத் தொடர்ந்தும் ஏற்படாமல் இருப்பதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்து விடலாம். அதேபோல், பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமையும் அகற்ற வேண்டும்.
அங்குள்ள இராணுவத்தினர் எங்கள் சமூகத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களாகவே இருக்கின்றார்கள். யுத்த காலத்தில் இல்லாத இராணுவ முகாம் இப்போது எதற்கு? எங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை. உடனடியாக அவ் இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.