அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 10ஆம் திகதி நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.