க.கிஷாந்தன்-
நுவரெலியா - ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரத்திலும் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அப்பகுதி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அருகாமையில் குப்பைத் தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும் அதனுள் குப்பைகளை போடாமல் வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே கொட்டி எரிந்து வருகின்றனர். இதன் போது குரங்குகள், கட்டக்காலி நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியன உணவுகளை உண்ணும் அதேவேளை அவ்விடங்களிலிருந்து தூக்கி செல்வதால் வீதிகள் மாசடைவதுடன் குப்பைகள் வீதிகளில் பரவக்கூடிய நிலை ஏற்படுகின்றது.
சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பும் காணப்படுகின்றது.
எனவே ஹக்கல பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை வீதியோரங்களில் வீசிச்செல்லாமல் அவ்விடங்களில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போட்டு சென்றால் சூழலை பாதுகாக்க முடியும்.