எஸ்.எம்.சன்சீர்-
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை தனியார் பிரிவினரால் மேற்கொள்வதாக தெரியவந்தால், நாளை முதல் சம்பந்தப்பட்ட அரச வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.
டிசம்பர் மாதம் 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த பரிசோதனைகள் அனைத்தையும் அந்தந்த வைத்தியசாலைகளிலேயே மேற்கொள்ள முடியும்.
அரச வைத்தியசாலைகளில் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இடையூறு விதிக்கப்படுவதாகவும் இதன்காரணமாக தனியார் மருத்துவ நிலையங்கள் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் பொதுமக்களினால் விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் காரணமாகவே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.