எம்.வை.அமீர் -
இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளர், அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் (11.01.2017) அன்று இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். அவருடன் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அங்கு சென்றிருந்தனர்.
இவ்விஜயத்தின் போது அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்திற்கும் சென்று அங்குள்ள விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடினார். இச் சந்திப்பிற்கு பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் தற்போதைய வளர்ச்சிப் போக்கு, செயற்பாடுகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் இருந்து இந்த பீடத்திற்கான மாணவர் வருகை அதிகரித்திருப்பதுடன், இதில் எழுபது வீதம் பெண்கள் கற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு வருகைதந்து கல்வியை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்காலத்தில் சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் அரபு மொழியிலான அறிஞர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களையும் வரவழைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தான் மேற்கொள்வதாக இங்கு அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா உறுதியளித்தார்.
இத்துடன் எதிர்காலத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் முயற்சிகள் மற்றும் அதற்கான சிறந்த தெரிவுகள் பற்றியும் இங்கு பேசப்பட்டது. குறிப்பாக, பெண்கள் வீட்டில் முடங்கி விடாமல் தமக்கான பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்தல் பற்றி மௌலானா அவர்கள் விளக்கி கூறினார்கள்.
மேலும், தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்வதாக அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா இங்கு தெரிவித்தார். சினேக பூர்வமான இச் சந்திப்பில் இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.