அவர் அந்த வாழ்த்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் இணையத்தளங்களினூடாக பார்வையிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.
எமது பதினொரு வருட பாடாசாலைக் கல்வியின் அடைவே உயர் தரக்கல்வியாகும். அதனை எம்மில் சிலர் தமது எதிர்கால இலட்சியத்தை மையமாக வைத்தே அப்பாடத்திட்டத்தை தீர்மானிக்கின்றனர். ஆனால், ஒரு போதும் உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் பாடத்திட்டத்துக்கேற்ப அவர்களின் இலட்சியத்தை அடைந்து கொண்டவர்கள் என்று சொல்பவர்கள் மிக்க அரிதே.
மருத்துவம், பொறியியல், வணிகம், கலை இவ்வாறான எத்துறையில் நீங்கள் உயர்தரப் பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும் அல்லது சிறந்த பெறுபேறுகளை பெறாமலிருந்தாலும் அது ஒரு போதும் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாகாது. மாறாக, பரீட்சை என்பது உங்கள் அறிவினைத்தேர்வு செய்யும் களமே என்பதை ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களின் மனதில் திடமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
உலகத்தில் தலைசிறந்த பல் துறையைச் சார்ந்த பிரபலங்கள் தனது பாடசாலைக் கல்வியைக்கூட முழுமையாகப் பூரத்தி செய்யாதவர்களே. ஆகவே, நீங்கள் உயர் தரப்பரீட்சையில் சித்தியெய்த விட்டாலும், மனம் தளர்ந்து விடாமல், உங்கள் திறமைக்கேற்ற துறையில் நீங்களும் உங்கள் உயர் கல்வியைத் தொடர முடியும். நவீன உலகில் அதற்கேற்ற வசதிகள் எங்கும் தாராளமயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் அவர் கூறுகையில், இவ்வருடம் கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சித்தியெய்திய மாணவச் செல்வங்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, குறிப்பாக கல்குடாத்தொகுதியில் சித்தியெய்தி பல்கலைக்கழகத்துக்கு தேர்வாகிய மாணவ, மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக எனது சொந்த மண்ணான கல்குடாப் பிரதேசத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையைச் சேர்ந்த பாத்திமா அரூசா என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் சித்தியடைந்து, தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பிடித்து எம்மண்ணுக்கும், சமூகத்துக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளமை தனக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும், குறித்த மாணவிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தாம் பிரார்த்திப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.