அஸ்லம் எஸ்.மௌலானா-
நல்லாட்சியில் கொழும்பு முஸ்லிம் வர்த்தகர்கள், கைசேதப்பட்டு, நடுத்தெருவில் நிற்கின்றனர் என உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருட காலமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"மைத்திரி ஆட்சிக்கு வந்தால், சிங்கள இனவாதம் ஒழிக்கப்பட்டு, தாம் நிம்மதியாக வாழ முடியும் என கற்பனை செய்த சிறுபான்மை சமூகங்கள் இன்று தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு மைத்ரி அரசு இனவாதிகளை மடியில் வைத்து ஊட்டி வளர்க்கிறது.
அது மாத்திரமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் தமது வர்த்தகத்துக்கு நல்லதாக அமையும் என எதிர்பார்த்த கொழும்பு முஸ்லிம் வர்த்தகர்களும் நாட்டின் ஏனைய நகர, பிரதேச முஸ்லிம்களும் தமது வர்த்தகங்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எத்தேர்தல் நடைபெற்றாலும் ஜனாதிபதி மைத்திரியினதும், பிரதமர் ரணிலினதும் கட்சிகள் தோல்வியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
குறிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலையில், அவரின் ஆதரவுடன் கோட்டாபய அல்லது பெசில் ராஜபக்ஷ போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் உள்ளது. ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் படுதோல்வி அடைவார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு வாக்களித்த மக்கள் கூட ரணில் பிரதமரான இந்த ஆட்சியில் வெறுத்துப்போயுள்ளனர்.
அதேவேளை ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன் எனக்கூறிய மைத்திரி, தேர்தலில் போட்டியிடுவது தனது வாக்கை தானே மீறியவர் என்ற வரலாற்று பெயரை அவருக்கு ஏற்படுத்தும் என்பதால் அவர் போட்டியிட மாட்டார். அப்படித்தான் போட்டியிட்டாலும் அவர் படுதோல்வியையே அடைவார். ஒரு மோசமான நிர்வாகத்தைக் கொண்டதும் நாட்டில் அபிவிருத்திகள் குன்றியதுமான ஆட்சி ஜனாதிபதி மைத்திரியுடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் மஹிந்தவை எதிர்பார்க்கும் சிங்கள மக்கள் முன்னரை விட மஹிந்த தரப்பை எதிர்பார்ப்பதனால் கோட்டாபய அல்லது பெசில் வெற்றியீட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்துவது என்பது பற்றி நிதானமாக சிந்திக்க முன்வர வேண்டும் என்பதை எமது உலமா கட்சி வலியுறுத்துகிறது.
2005 ஆம் முதல் அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் பதவிகள் பற்றி பேசாமல் சமூகம் பற்றியே சிந்தித்துச சிறந்த முடிவுகளை எடுத்த உலமா கட்சியுடன் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற முன் வருவது சமூகத்துக்கான கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் மூலம் வென்றெடுக்க வழி வகுக்கும்" என்றும் குறிப்பிட்டார்.