ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
குடும்பவாரிசுகளின் நிரந்தரச் சொத்தாக நமது ஊரின் அரசியல்கதை தொடர்கிறது.நாம் அனைவரும் விரும்பியோ,விரும்பாமலோ இந்த அநியாயத்திற்கு துணையாக உள்ளது தவிர்க்க முடியாத புற்றுநோயாக உள்ளது.
அரசியல் தலமைகளின் பிறக்க இருக்கின்ற குழந்தை,நடைபயிலும் குழந்தைகளைக்கூட சமூகத்தின் தலைவர்களாக செங்கம்பலம் இட்டு சமூகத்தின் முழுத்துரோகத்திற்கும் நியாயம் தேடுகின்ற அறிவாளிகள் இன்னும் வாழ்கின்ற பிரதேசம்.
குறிப்பாக வாரிசு அரசியல் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமா என்பது நீண்ட விவாதத்திற்கு உரியவிடயமே. நமது ஊரைப் பொறுத்தவரையில் இந்த வாரிசு அரசியலின் தேவை மக்களால் விரும்பியே திணிக்கப்பட்டதாகவே உள்ளது.
குறிப்பாக கௌரவ நஜீப் மற்றும் இம்ரான் போன்றவர்கள் மக்களின் அழுத்தங்கள் காரணமாகவே அரசியல் பிரவேசம் கொண்டனர்.இதற்கு காரணம் புதிய அரசியல் தலமைகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கைகள் ஏமாற்றத்தில் முடிந்ததே.
இந்த நிலையில் கீழ்மட்ட அரசியல்தலமைகளைப் பொறுத்தவரையில், கடந்தகாலங்களில் பலர் மக்களால் அறிமுகம் செய்யப்பட்டனர். இருந்தும் முன்னால் நகரபிதாவைத் தவிர மற்றைய எவர்களாலும் தனித்துவமாக அல்லது பெரிய தலமைகளுக்கு எடுபிடியாக இல்லாமல் அடுத்தகட்ட அரசியலை முன்னெடுக்க முடியவில்லை.
அதன்படி பாராளுமன்றக் கதிரை அரசியல்வாரிசுகளுக்கு மட்டுமே உரியதாக நிச்சயிக்கப்படுகிறது. புதியவர்கள் மற்றும் அரசியல்குடும்ப பின்னனி இல்லாதவர்கள் உள்ளூராட்சி மன்றங்களுடன் ஊமைகளாக்கப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக சமூகத்தில் தனித்துவமாக செல்வாக்கு இல்லாதவர்கள், வாழ்நாள் முழுவதும் மற்றவர் முதுகில் குதிரை சவாரி செய்பவர்கள், கஷ்டப்பட்டு உழைக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற கூட்டத்தினருக்கு இப்படியான வாரிசு அரசியல் அவசியமாக உள்ளது.
ஆகவே உள்ளூராட்சி மன்றங்களினூடாக சமூகத்தின் முற்போக்கு சிந்தனையுடையவர்களை உள்வாங்கவேண்டும். இவர்களின் மூலம் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றத்திற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை தெறிவு செய்வதற்கான நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
இதனை விடுத்து வாரிசு அரசியலை விமர்சிப்பதால் பயனேதும் இல்லை. நமது வாரிசுகளும் இப்படியே விமர்சித்து தொடர்கதையாகவே இருக்கும். நாம் ஓரிடத்தில் முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமானால், அடுத்த பந்திக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆகவே சமூகத்தில் கடலுக்குப் போகின்றவன் மகனுக்கும் காரியாலயத்தில் தொழில்புரிகின்றவனின் மகனுக்கும் சம உரிமையும் தகுதியும் உடையதாக அரசியலை மாற்றுவோம்.