அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை உத்தியோக பூர்வமாக கையளித்தலும் குறித்த பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கும் நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சகாப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸம்ஸ் மத்திய கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இதன் மூலம் குறித்த பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்திறமைகள் மேலும் விருத்தியடைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இம்மைதானத்தை விஸ்தரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு அப்பணியினையும் மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும் இப்பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த ஒலிபெருக்கி தொகுதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில்; கொள்வனவு செய்யப்பட்டு பிரதி அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.