ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு பல்கலைக் கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, மாணவர்கள், திங்கட்கிழமை பிற்பகல் (23.01.2017) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சகல மாணவர்களுக்கும் விடுதி வசதியுடன் மீண்டும் விரிவுரைகளை ஆரம்பிக்கக் கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத் தொகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வாயிலை சென்றடைந்து, வாசக அட்டைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பினார்கள்.
கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு, சனிக்கிழமை காலை 8.00 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிர்வாகக் கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் 10 பேர், இன்றையதினம், ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டு, செவ்வாய்க்கிழமை (24.01.2017) நீதிமன்றத்துக்கு அஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாக, மாணவர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.