கிழக்கு ஊடகவியலாளர்கள் வட மாகாணத்திற்கான ஊடக பயணமொன்றை நாளை (26) வியாழக்கிழமை மேற்கொள்ள உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இவ் ஊடக பயணத்தில் காத்தான்குடி மீடியா போரத்தினைச் சேர்ந்த 12 ஊடகவியலாளர்கள் பங்கு கொள்கின்றனர்.
இவர்கள் வெள்ளி மற்றும் சனி ஞாயிறு (27, 28, 29) ஆகிய 3 நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து அரசியல், சமூக, சமயம், நல்லிணக்கம் மற்றும் இன நல்லுறவு போன்ற விவகாரங்களில் கள ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
மன்னார், வில்பத்து காணி மற்றும் மீள் குடியேற்றங்கள் தொடர்பான விவகாரங்களில் நேரடி கள ஆய்வுகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளதுடன் அங்குள்ள மக்களையும் சந்திக்கவுள்ளனர்.
மேலும், நல்லாட்சியில் சமூக உறவுகள் அபிவிருத்திகள் தொடர்பாக அரசியல் சமூக தலைவர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இவ் ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கும் நாட்களில் வட மாகாணத்திலுள்ள ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அங்குள்ள ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
மேலும் வட மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க் கட்சித்தலைவர், வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்க உள்ளனர்.
வட மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் இவர்கள் பல்வேறு பட்ட பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.
மீள் குடியேற்ற பிரதேசங்களையும் இவர்கள் பார்வையிட உள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.