எஸ்.அஷ்ரப்கான்-
ஜி.எஸ்.பி. வரி இலங்கைக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினால்தான் ஜி. எஸ்.பி. வரிச் சலுகை தரப்படும் என்ற ஐரோப்பாவின் கட்டளை வாபஸ் பெறப்பட்டுத்தான் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் அவசியம் இனி இல்லை என தெரிகிறது என உலமா கட்சி இன்று (12) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக மேலும் அக்கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிடும் போது,
இந்த விடயம் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி மிக இலகுவாக கிடைக்கவில்லை. உலமா கட்சியினதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினதும் பாரிய போராட்டம் இதன் பின்னால் இருந்தது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது, பெண்கள் காழியாராக நியமிக்கப்படுதல் என்ற யோசனைகளை அவை முன் வைக்கப்பட்ட காலம் முதல் உலமா கட்சி எதிர்த்து வருகிறது. அதே போல் இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத போக்கை புரிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள் ஜி எஸ் பி சலுகையை காட்டி முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றும் சியோனிச திட்டத்தை நிறைவேற்ற முனைந்தன. இதன் ஆபத்தை புரிந்து கொண்ட உலமா கட்சி இதனை பகிரங்கமாக கண்டித்து இதனை மக்கள் மயப்படுத்தியது. அதனை தொடர்ந்து இம்முயற்சிக்கெதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாரிய ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடத்தியது மட்டுமன்றி அதன் பொதுச்செயலாளர் அப்துர் ராஸிக் சிறைக்கும் சென்றார்.
இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டம் அரசையும் ஐரோப்பிய நாடுகளையும் கிலி கொள்ளச்செய்ததனால் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினால்தான் ஜி எஸ் பி தருவோம் என்ற நிபந்தனையை கை விட்டுள்ளார்கள்.
இது விடயத்தில் வேறு ஏதும் தந்திரங்களை பயனபடுத்தி முஸ்லிம் விரோத மைத்திரி ரணில் அரசு முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைக்க முற்படலாம் என்பதால் முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலமா கட்சி தெரிவிப்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.