கொழும்பில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துகொள்வதற்காக, சுமார் 30 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டில், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மோசடி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால், இவர் கடந்த 20ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.
கொட்டாஞ்சேனை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளில் ஐவரை, அந்தப் பிரபல்யமான பாடசாலையில் சேர்த்துகொள்வதாகக் வாக்குறுதியளித்தே, அந்த ஆசிரியர், ஒவ்வொரு பிள்ளையின் பெற்றோரிடமிருந்து தலா 6 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார்.
பாடசாலை இலட்சினை மற்றும் ஏனைய ஆவணங்களை போலியாக தயாரித்தே, அந்த ஆசிரியர் இலஞ்சம் வாங்கியுள்ளார். சந்தேகநபரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர், கடந்த 25 வருடங்களாக குறித்த பாடசாலையிலேயே கடமையாற்றுவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆசிரியர், அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவருடன் மிகநெருங்கிய தொடர்பை பேணியே, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனத்தெரிவித்த பொலிஸார், பழைய மாணவனை கைதுசெய்வதற்கு வலை விரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.