அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக்கல்லூரியில் இருந்து இம்முறை (2016) க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவிகளும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இப்பெறுபேறுகள் கல்லூரிக்கு பெருமையை தேடித் தந்திருப்பதுடன் எமது பணியில் ஆத்ம திருப்தியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன் ஏனைய மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் இக்கல்லூரி மீது நாட்டத்தை உருவாக்கும் எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் இருந்து முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றிய 05 மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அறபுக்கல்லூரிக்கு சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் உள்வாங்கப்பட்டு, இஸ்லாமிய, அறபுக்கல்வியோடு க.பொ.த.உயர் தர பிரிவுக்கான பாடங்களும் போதிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற இந்த அரபுக் கல்லூரிக்கு பொலிவேரியன் புதிய நகரில் நிரந்தர கட்டிடக் தொகுதியொன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்தார்.