எம்.ரீ. ஹைதர் அலி-
கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக பூநொச்சிமுனை ஹிஸ்புல்லாஹ் வீதி மற்றும் அதனை அண்மித்துள்ள கொன்றீட் வீதிகளில் அதிகளவான வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி மக்களினுடைய இயல்புநிலைமை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள தோனாவினூடாக நீர் செல்ல முடியாதவாறு தடைப்பட்டு காணப்படுவதனாலும், இப்பிரதேசத்திலுள்ள வீதிகள் நீர் வடிந்தோடும் விதமாக உரிய முறையில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப்படாமையினாலுமே இவ்வாறு வீதிகளில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதற்கான காரணமாக அமைந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இப்பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமையினை பார்வையிட்டதோடு, உடனடி நடவடிக்கையாக வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய வகையில் வீதியின் ஓரங்களில் காண்கள் வெட்டப்பட்டு வீதிகள் மற்றும் மக்களின் வீடுகளில் தேங்கி நின்ற வெள்ளநீரினை வெளியேற்றும் நடவடிக்கைகள் 2017.01.26ஆந்திகதி - வியாழக்கிழமை (இன்று) மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வீதியிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்யும் விதமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் வீதியின் ஓரங்களில் மண் இட்டு நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டன.