சர்ச்சைக்குரிய விசேட அபிவிருத்திகள் ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்த ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து மாகாண சபைகளிலும் குறித்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சில ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், சிலர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்காத ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மூத்த உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை கோரியுள்ளனர். மேல் மாகாண சபையிலும் குறித்த சட்டமூலம் மேலதிக 24 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
வட மேல் மாகாண சபையும் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சியினர் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில் ஏகமனதாக குறித்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. வடக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளிலும் விசேட அபிருத்தி ஏற்பாடுகள் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.