வடக்கு முஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆண்டு உறுதியுடன் செயலாற்றவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார்.
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது பல்வேறு சிரமங்களையும் துன்பங்களையும் இழப்புக்களையும் சந்தித்த வடக்கு முஸ்லிங்கள் இன்னும் பல்வேறு துயரங்களுடனேயே தமது வாழ்நாட்களை கடத்தி வருவதுடன் அவர்களுக்கான அபிவிருத்திகள் பாரபட்சமின்றி கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் காணப்படுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,
நேற்று (ஞாயிற்றுக்கிழமை 05.02.2017) அன்று மன்னார் முசலியில் இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இவ்வாறு கூறினார்.
வடக்கு முஸ்லிங்கள் இதுவரை பூரண அபிவிருத்தின் வாசனையை நுகரவில்லை என்பதை அவர்களின் மண்ணில் சஞ்சரிக்கும் போதே தெரிந்து கொள்ள முடிவதுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதால் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலர் தமது ஆதங்கத்துடன் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் இதன் போது கூறினார்.
எனவே பல்வேறு இடர்களுக்கு மத்தியில் கட்சி அரசியலாலும் மேலும் பல காரணங்களால் அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட வடக்கு முஸ்லிங்களுக்கான தீர்வினை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆண்டுக்குள் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தமது தனித்துவத்தையும் அரசியல் உரிமைகளையும் இழக்காத வகையில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவாரத்தைகளில் தற்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கோ தனித்துவத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்வுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடமளிக்கவோ இணக்கம் தெரிவிக்கவோ மாட்டாது என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் முஸ்லிங்களின் அபிலாஷைகளை நன்கு அறிந்த ஒரே முஸ்லிம் கட்சி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே என்பதுடன் அவர்களின் தேவைகளையும் அரசியல் இருப்புக்கான காரணிகளையும் மையப்படுத்தி அவர்களுக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையுடன் இணைந்து அதன் உறுப்பினர்கள் செயலாற்றி வருகின்றனர்.
தற்போது கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உண்மையான ஒற்றுமையுடன் அரசியல் தீர்வொன்றிற்கான பயணத்தினை முன்னெடுத்து வருவதுடன் அவர்களுக்கு முன்னுதாரணமாக கிழக்கில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையான நல்லாட்சியை முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு முதலமைசச்ர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்