தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 வது பேராளர் மாநாடு நாடெங்கிலும் இருந்து வந்துள்ள மண்டபம் நிறைந்த பேராளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் கட்சியின் பிரதித்தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமதின் கிராஅத்துடன் முதலாவது அமர்வு ஆரம்பமாகியது. கட்சிக் கீதம் இசைக்கப்பட்ட பின்னர் மண்டபம் அதிர தக்பீர் முழக்கம் ஒலித்தது.
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற கட்டாய உச்ச பீட கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பதவி வழி உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார்.
செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ .காதிர் ஆண்டறிக்கை வாசித்த பின்னர் பொருளாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எம் .எஸ் .எம் .அஸ்லம் அவரது அறிக்கையை வாசித்தார். அவை அனைத்துப் பேராளர்களினாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.
அடுத்து யாப்பு திருத்தங்கள் பற்றி தலைவர் அமைச்சர் ஹக்கீம் அறிவித்தார். மாவட்டங்கள் தோறும் இருந்து வந்திருந்த பேராளர்கள் பலர் ஆர்வத்துடன் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இரண்டாவது அமர்வு பிற்பகல் நடைபெறவுள்ளது.
அதன்போது புதிய உயர்பீட உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளதோடு அவர்களது பைஅத் நிகழ்வும் இடம்பெறும். மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் . அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான உரையை நிகழ்த்துவார். இறுதியில் ஸலவாத்துடன் பேராளர் மாநாடு நிறைவுறும்.
நாச்சியாதீவு பர்வீன்.