யாழ்தேவி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற போது பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி கடந்த 11 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பகுதி நேர வகுப்பிற்கு செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து பஸ்களில் பயணித்து கல்கமுல பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்திற்கு வந்த மாணவி அங்கிருந்த ரயில் வீதியில் நின்ற சந்தர்ப்பத்தில், மாணவி மீது சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொதுமக்களின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த மாணவியை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் சகோதரர்கள் தொடர்ந்து தன்னை அடித்து தொல்லைப்படுத்துவதால் தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள இங்கு வந்ததாக தெரிவித்துள்ளார். வீட்டில் சகோதரர்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 17 வயதுடைய பாடசாலை மாணவியே தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டவராவார்.
இதையடுத்து பொலிஸாரினால் குறித்த மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.