அரச, தனியார் ஒன்றிணைந்த வர்த்தகமாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தகுதியான முதலீட்டாளர் ஒருவர் தற்போது தெரிவு செய்யப்பட்டு, அது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
விலைமனுக்களை முன்வைத்த நிறுவனங்களில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றே அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்காக 10 நிறுவனங்கள் விலைமனுக்களை முன்வைத்திருந்ததுடன், அவற்றில் மூன்று நிறுவனங்கள் இறுதிக் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. இலங்கையுடன் தொடர்புபட்ட பீஸ் எயார் நிறுவனம், மாலைத்தீவுடன் தொடர்புபட்ட சுப்பர் குரூப் நிறுவனம், அமெரிக்காவின் டி.பி.ஜி. நிறுவனம் ஆகியன இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களாகும். எனினும் இந்த செயற்பாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதேவேளை, ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கலுக்கு விலைமனுவை முன்வைத்த பீஸ் எயார் நிறுவனம் நேற்று பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.