ஐ.ஏ.காதிர் கான்-
"கொழும்பில் உள்ள குப்பைகளை ஏக்கல பகுதிக்கு கொண்டு வரவேண்டாம்" எனத் தெரிவித்து, ஜா-எல ஏக்கல மடம சந்தியில், இன்று (09) வியாழக் கிழமை காலை முதல், ஏக்கல பிரதேச மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில் ஜா-எல ஏக்கல மடம சந்திப் பகுதியில் பாதையை இடை மறைத்து, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஜா-எல முதல் மினுவாங்கொடை வரையில் வீதிப் போக்குவரத்தும் காலை வேளையில் முற்றிலும் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு, பாரியளவில் மேலதிக போக்குவரத்துப் பொலிஸாரும் வர வழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, சீதுவ, ஜா-எல, கந்தானை, வத்தளை, பேலியகொடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும் மேலதிக சேவைக்காக ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.