தொடர் அறிக்கை: 01
இத் தொடரில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தலைமையில் 1993 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் தலைவரின் மரணத்தின்பின் ஏற்பட்ட தலைமைத்துவப் பிரிவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அணியிலிருந்து செயற்பட்டார். புதிய தலைவரின் கிங் மேக்கராக செயற்பட்ட இவரின் செயற்பாடுகள் காரணமாக இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சூழ்நிலைக் கைதியாக மாறவேண்டி ஏற்பட்டது. இதுவோர் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு நிகழ்வு என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. இதன் தாக்கம் ஹக்கீம் பேரியல் முரண்பாடு, ஹக்கீம் நசீர் அஹமட் முரண்பாடு, ஹக்கீம் அதாவுல்லா முரண்பாடு, ஹக்கீம் ரிஷாத் அமீரலி முரண்பாடு எனப் பட்டியல் நீள்வதற்கு காரணமாக அமைந்திருந்தது.
இவர்கள் கட்சியின் ஆரம்பகால முக்கியஸ்தர்களாக இருந்து இந்தக் கட்சியை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர்கள். கட்சிக்குள் சமாந்தரமானவர்கள் தனக்கு ஈடாக இருந்தால், தனது வரப்பிரசாதங்களுக்கு தடையாக அமைந்துவிடும் என்பதற்காக சிறுசிறு விடயங்களும் பூதாகரமாக்கப்பட்டு அவர்களாகவே விலகிச் செல்லும் செயற்கையான உருவாக்கம் நடாத்தப்பட்டது. காலப்போக்கில் அரசியல் நீரோட்டம் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களை தனிக்காட்டு ராஜாவாக நடைபோடுவதற்கு வழிவகுத்தது எனலாம். ஆனால் காலமாற்றமும் எதிர்பாராத சந்தர்ப்பங்களும் தலைமைத்துவத்தை மிஞ்சிய அதிகாரங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொண்டமையும் பஷீர் சேகுதாவூதிலேயே கட்சியிலுள்ள ஏனையவர்கள் தங்கியிருக்க வேண்டிய தோற்றப்பாடும் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பஷீர் சேகுதாவூத் அவர்கள் கட்சியின் கடிவாளத்தை தன்னுடைய கைகளில் வைத்துக்கொண்டு செயற்பட்ட நிலைமையை அல்லது சந்தர்ப்பங்களை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மறக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். தொடரும்....
நன்றி.
A.அப்துல் நாசர் ,
முன்னாள் ஏறாவூர் நகரசபைத் தவிசாளர்.
A.அப்துல் நாசர் ,
முன்னாள் ஏறாவூர் நகரசபைத் தவிசாளர்.