Ruaff Hakeem and Naseer Ahamed- ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட் |
அரசியல் பரவலாக்கல் அல்லது இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு ஒரு தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்று வெளியிலே பேசிக் கொண்டிருக்கின்ற வேளையிலே அதிகாரத்தை பறிக்கின்ற நிகழ்ச்சி நடக்கின்றதாக என்ற சந்தேகங்களே எழுகின்ற வேலைத் திட்டங்கள் இன்று நடைபெற்றுக் கொண்டு வருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேச குடி நீர் திட்டத்தின் ஆரம்ப வேலைகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
சிறுபான்மை சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய கால கட்டம். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் மனம் திறந்து பேசி சிறுபான்மை சமூகத்தினுடைய ஒற்றுமைக் குரலாக அதிகப் படியான அதிகாரத்தை பெறுவதற்காக பேசுகின்ற அதேவேளையிலே இரண்டு கட்சிகளும் பேசி எங்களுடைய இனத்துக்கிடையே உள்ள அதிகாரங்களை எவ்வாறு முரண்படாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை நாங்கள் தெளிவாக பேச வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.
தெற்கிலே பேரினவாத சக்திகள் தீர்வு கொடுக்கின்ற விடயத்திலே குழப்புகின்ற பல முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை குழப்புகின்ற சக்திகள் தெற்கிலே பாரிய அழுத்தங்களை கொடுக்கின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் சகோதரர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் சகோதரர்களும் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. எவ்வாறான சூழ்ச்சிக்கும் இச்சமூகம் மாட்டிக் கொள்ளக் கூடாது.
இதுவரை காலமும் ஒரு அரசியல் தீர்வு வரும் வரும் என்று பேசப்பட்டு, இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருந்து எந்த தீர்வும் வராமல் இருக்கின்ற வேளையில், ஒரு தீர்வை இன்று எட்டப்பட்டு விடும் என்கின்ற சூழல் இருக்கின்ற வேளையிலே இதை குழப்பு சில சக்திகள் முயற்சி எடுக்கின்ற வேளையில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான சக்திகள் கட்சிக்குள் புகுந்து கட்சியை சீரழிக்கின்ற, இழிவுபடுத்துகின்ற நடவடிக்கைகள் எல்லாம் வெளியில் இருந்து நிதிகள் கொடுக்கப்பட்டு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயம் அதில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்காக உண்மையாக போராடுகின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறுபான்மையுடைய இரண்டு குரல்களாக திகழ்கின்றது. ஏனைய கட்சிகளை எடுத்துக் கொண்டால் தனி மனித சுய இலாபத்திற்காக, தனி மனித கதிரைகளை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சிகள், அதில் எந்தவித அரசியல் கோட்பாடுகளும் இல்லை, அரசியல் தீர்வுக்கான கோட்பாடுகளும் உள்வாங்காத கட்சி.
இந்நாட்டில் சிறுபான்மை சமூகம் அரசியல் உரிமையற்ற சமூகமாக இருக்கின்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்து கொண்டு பாரிய அரசியல் கௌரவம் இல்லாத அநாதைகளாக இருக்கின்ற சூழலிலே ஒரு அமைச்சர் இருக்கின்றால் என்றால் ஒரு அரசியல் உரிமையை பெற்றுக் கொள்கின்ற விடயமல்ல.
ஆளும் ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்களால் எதையும் செய்து கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே தவிர சலுகைகளை பெறுவதற்கு உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. சலுகைகளை பெறும் கட்சிகளை நாங்கள் அடையாளம் கண்டோம். இவ்வாறான கட்சிகளை தனி நபருக்கு சலுகைகளை பெறுவதற்காக எங்களுடைய உரிமைகளை பெறுகின்ற ஒரு விடயத்தை விட்டுக் கொடுக்க போகின்றோமா என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டியவர்கள் பொது மக்கள்தான் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஓட்டமாவடி, பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வினியோக திட்டத்தின் பொது முகாமையாளர் பொறியலாளர் பி.ஏ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.