இறைவன் உலகத்தில் பணக்காரர்களையும், ஏழைகளையும் சமமாகவே படைத்திருருக்கிறான். எமது சமூகத்தில் வறுமையின் காரணமாக ஒரு வேளை சாப்பாட்டைக் கூட சாப்பிடமுடியாமல் கஷ்டப்படும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அந்த ஏழை மக்களின் எதிர்பார்ப்பு மூன்று வேளை ருசிக்கான சாப்பாடல்ல ஒரு வேளை பசிக்கான சாப்பாடாகும்.
எமது சமூகத்தில் நடைபெறும் வைபவங்களில் வீண் விரயமாக கொட்டி விடப்படும் உணவை அந்த கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு பொதி செய்து கொடுப்பதன் மூலம் மூன்று வேளை சாப்பாடாக மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் சிந்திப்பதில்லை. இன்று நடை பெறும் அதிகமான வைபவங்களில் வீண் விரயமாக்கப்படும் உணவுகள் குப்பைத் தொட்டிக்கே செல்கிறது. வைபவங்களில் மீதமாகும் உணவுகளை எம் சமூகம் பகிர்ந்தளிக்க நினைப்பதுமில்லை.
தன்மானத்துடன் வாழும் அதிகமான ஏழைகள் கையேந்தா விடினும் யாராவது கொண்டு வந்து தரமாட்டார்களா என வாசற்படியை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. இன்று எம் மத்தியில் இருக்கும் ஒரு குறைபாடு சுயநலமாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என நினைப்பதாகும்.இந்த எண்ணத்தை முதலில் சீர் செய்ய வேண்டும். சகோதரத்துவ மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அண்மையில் கொழும்பில் திருமண வைபவம் ஒன்றிற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. குறித்த வைபவத்திலே அதிகமான உணவு மீதமாகி விட்டது. அதனை பார்த்த போது இவ்வளவு சாப்பாடு வீண் விரயப்படுகிறதே என மதிற்குள் நினைத்தேன். ஆனால் என் நினைப்பு ஒரு சில நிமிடத்தில் சிதறு தேங்காய் போன்றானது. காரணம் திருமண மண்டப முகாமையளரின் தொலைபேசி அழைப்பின் பின்னர் ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவினர். அவ்விடத்துக்கு வருகை தந்தனர். மீதமாக இருந்த உணவை அழகிய முறையில் பொதி செய்தனர். சுமார் 56 உணவுப் பொதிகள் அவர்களினால் பொதி செய்யப்பட்டது. அவற்றை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர். அந்த இளைஞர்களின் செயல் எனக்குள் ஆச்சரியத்தையும், கேள்வியையும் உண்டாக்கியது. நான் எனது கேள்விக்கான விடையை அறிய குறித்த மண்டப முகாமையாளரிடம் சென்று அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்த போது அவர் கூறிய பதில் பின்வருமாறு அமைந்தது;
இந்த மண்டபத்தில் அதிகமான உணவுகள் மீதமாகும் ஆனால் அவற்றை நாங்கள் குப்பை வண்டிக்கு இடுவது வழமை. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஆறு இளைஞர்களும் என்னிடம் வந்து வினயமான வேண்டு கோள் ஒன்றினை விடுத்தனர். உணவு மீதமாகும் போது அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டும் என. அவர்களிடம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் எனக் கேட்டேன் அதற்கு அவர்கள் கூறிய பதில் என்னை கண் கலங்க வைத்தது. இந்த மண்டபத்தில் கொட்டி விடப்படும் உணவுகளால் பல குடும்பம் வாழும், தயவுடன் தந்து உதவுங்கள் என கூறினார்கள். அன்றிலிருந்து நான் இரண்டு பொதிகள் மீதமானாலும் அழைப்பை ஏற்படுத்தி அவர்களிடம் கொடுப்பேன். அவர்ள் அதை கொண்டு சென்று அன்றாடம் உணவிற்கு கஷ்டப்படும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பார்கள். அந்த இளைஞர்களை நம்பி பல ஏழைக் குடும்பம் காத்திருக்கின்றது, என அவர் கூறிய பதில் மெய் சிலிர்க்க வைத்தது.
இன்று அனைத்து பிரதேசங்களிலும் அன்றாடம் இவ்வாறான விசேட வைபவங்கள் நடைபெற்று உணவு மீதமாகி கொட்டி விடப்படுகிறது. இதை பயனுள்ள முறையில் பகிர்ந்தளிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வாறான இளைஞர் குழு உருவாக வேண்டும். இளமை பருவத்தை சமூகப் பணிக்காகவும் அர்பணிக்க வேண்டும். ஏழையின் பசி தீர்க்க முன்வரும் ஒவ்வொரு இளைஞனையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்..
நியாஸ் கலந்தர்-