அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா (சின்னம்மா) விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா எதிர்வரும் 7 அல்லது 9ஆம் திகதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஏல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா உரையாற்றியபோது:
”அதிமுகவின் கொள்கைகளைக் கட்டிக்காத்து மாநில அரசு செயல்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்றார் சசிகலா.