மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கிராமான நுவரெலிய, அகரபத்தன, ஹூட்வில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 வீடுகளைக் கொண்ட 'ஹூட்வில்புரம்' கிராமத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (09) முற்பகல் மக்களுக்கு கையளித்தார்.
லயன் வீடுகளுக்கு பதிலாக புதிய கிராமங்களை தோட்டப்பகுதிகளில் உருவாக்கும் திட்டத்தின் 'எமக்குரிய காணியில் எமக்குரிய வீடு மலையகத்துக்கு புதிய கிராமம்' எண்ணக்கருவிற்கமைய இக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை, குளியலறை கொண்டதாக 550 சதுர அடி வீடுகள் 07 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வுக்காக வருகைதந்த ஜனாதிபதி அவர்களை பாரம்பரிய முறைகளுடன் வரவேற்ற மக்கள், தேசிய கொடிகளுடன் இருபுறமும் நின்று கௌரவமளித்தனர்.
கிராமத்தை மக்களுக்கு உரித்தளிப்பதனை குறிக்குமுகமாக நினைவு முத்திரையும் முதல்நாள் தபாலுறையும் வெளியிடப்பட்டது. மக்களுக்கான காணி உறுதிகள், பாடசாலைப் பிள்ளைகளுக்கான பால் வழங்குவதற்கான நிதி வழங்குதல், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் கடன் வழங்குதல், சமூர்த்தி உதவி வழங்குதல், 2016 உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரப்பத்தனை ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செபமாலை செலெஸ்ரினா மேரி எனும் மாணவிக்கு மடிக்கணனி வழங்கியமை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, அமைச்சர்களான பீ. திகாம்பரம், மனோ கணேசன், எம்.எச்.எம்.ஹலீம், பைசர் முஸ்தபா, அர்ஜூண ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.