எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜெஸ்மீன் (மஞ்சள்) இல்லம் அதிகூடுதலான புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவாகியுள்ளது.
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று (9) அல்-அர்ஹம் வித்தியாலய கடற்கரை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் லோட்டஸ்(பச்சை), ஓர்கிட்(நீலம்), ஜெஸ்மீன்(மஞ்சள்) ஆகிய இல்லங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றினர். இதன்போது ஜெஸ்மின் இல்லம் 417புள்ளிகளைப் பெற்று 1ஆம் இடத்தினையும், லோட்டஸ் இல்லம் 410புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், ஓர்கிட் இல்லம் 337புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
பாடசாலை அதிபர் ஏ.எம் இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் விசேட அதிதியாகவும், அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்களான அஷ்ஷேஹ் ஏ.எம். றகுமத்துல்லா மற்றும் ஏ.ஜீ பஸ்மில், அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் அதிதிகளினால் ஞாபச்சின்னங்கள், பரிசுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான பொது மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.