க.கிஷாந்தன்-
டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா - சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் சீ.யூ.குமாரசிரி பொறுப்பில் 08.02.2017 அன்று பகல் 2 மணிக்கு இந்தப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வரலாற்றில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை இதுவே முதல் தடவையென வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி தொழிலாளியான தாய்க்கு இதற்கு முன்னர் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக மூவர் இருப்பதாகவும், இது அவருக்கு மூன்றாவது பிரசவமாக உள்ளதாகவும் மோகன் புஸ்பலதா என்ற தாயின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதனால் தமக்கு மகிஷ்ச்சியாக இருக்கின்றது என தாயான புஸ்பலதா தெரிவித்தார்.
எனினும் குறித்த தாயும், மூன்று ஆண் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.