காரைதீவு நிருபர் சகா-
சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 50வது சிரார்த்ததின வைபவம் நேற்று (18.03.2017) சனிக்கிழமை காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அவர் பிறந்த காரைதீவு மண்ணில் நேற்றுக் காலை இந்துசமயவிருத்திச்சங்கம் பெருவிழாவொன்றை அடிகளாரது திருவுருவச்சிலைக்கு முன்னால் சங்கத்தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடாத்தியது. முதலில் பகவான் ஸ்ரீ இராமகிருஸ்பரமஹம்சரின் வேதபாராயணத்தைத்தொடர்ந்து சுவாமியின் திருவுருவுச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலியும் இடம்பெற்று தொடர்ந்து சங்கச்செயலாளர் கு.ஜெயராஜியினால் மங்களாரதி காட்டப்பட்து.
சிறப்புரையை சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாச்சபையின் செயலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நகழ்த்தினார். மாணவர்களும் உரையாற்றினார்கள். பட்டயத்தை ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரன் வாசித்தார். சுவாமியின் பெயரால் கல்வி நம்பிக்கை நிதியமொன்றும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. சுவாமியின் குடும்பத்தின் சார்பில் முதல் தொகையை ஓய்வுநிலை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.விஜயரெத்தினம் அதனை வழங்கிவைத்தார். சுவாமியின் அபிமானிகள் மாணவர்கள் உறவுக்காரர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.