அளுத்கம பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியுள்ளது. இவ்வாறு நோய்த் தொற்று பரவிய மாணவர்களை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த பாடசாலை மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய அழகுக் கலை நிபுணர் ஒருவரும் மற்றுமொரு நபரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவருவரும் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் பாரதீ விஜேரட்ன உத்தரவிட்டுள்ளார்.
பெண்களின் உடல் அமைப்பினைக் கொண்ட அழகுக்கலை நிபுணர்கள் திருமணப் பெண்களை அழகுபடுத்துவதில் நிபுணராக கடமையாற்றியுள்ளார். குறித்த நபர் சிறைச்சாலையில் தனியான ஓர் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எச்.ஐ.வீ நோய்த் தொற்றுப் பரவிய மாணவர் ஒருவரின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் குறித்த மாணவர் பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 மற்றும் 16 வயதான மாணவர்களே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காவோர் தொடர்பில் கண்டறிவதற்காக பொலிஸ் விசேட குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறுவதால்தான் பிள்ளைகள் இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் தெளிவுபடுத்தப்பட உள்ளனர்.