எம்.ரீ.ஹைதர் அலி-
எங்களால் வீசப்படுகின்ற கழிவு பொருட்களைக்கொண்டு ஒரு அழகான முறையில் பல கைப்பணி பொருட்கள் இப்பாலர் பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது என்பது இந்தப் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாகவும் ஆக்கத்திறன் உள்ளவர்களாகவும் வருவார்கள் என்பதற்கு இதுவொரு மிகப்பெரும் சான்றாக இருக்கிறது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து றிதிதென்னை ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2017.03.17ஆந்திகதி-வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
மாணவர்கள் என்கின்றபோது மாணவர் பருவத்திற்கு முன்னுள்ள இந்த பாலர் பருவம் என்பது சரியான முறையில் வழி காட்டப்பட வேண்டும். விளையாட்டினூடாக இந்த பிள்ளைகள் தங்களது ஆளுமைகளை விருத்தி செய்கின்ற ஒரு படிமுறைதான் இந்த பாலர் பாடசாலையில் போதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கவேண்டும்.
நாங்கள் அனைவரும் பொதுவாக கருதுவது பாலர் பாடசாலையினை நிறைவு செய்யும்போது நமது பிள்ளைகள் ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக வெளியேற வேண்டுமென்று இதற்கான காரணத்தைப் பார்த்தால் தற்காலத்தை பொருத்த மட்டில் போட்டிகள் அதிகமாக இருப்பதனால்த்தான் நாங்கள் அவ்வாறு நினைக்கின்றோம். இருந்தபோதும் இந்த சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகள் விளையாடுகின்ற பருவத்தில் அந்த பிள்ளைகளுக்கு நாங்கள் இப்போதிருந்தே சுமைகளை கொடுத்து பிள்ளைகளின் அறிவு விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.
மேலும், நான் இப்பிரதேசத்திற்கு நிகழ்வு ஒன்றுக்கு வருகை தத்திருந்தபோது றிதிதென்னை இக்றா வித்தியாலயத்தினுடைய அதிபர் என்னிடம் கூறினார். இப்பாடசாலை உருவாக்கியபோது மகாவலி திட்டத்தினூடாக கட்டப்பட்ட கட்டடத்தை தவிர எந்தவொரு அரசியல்வாதியினாலும் இப்பாடசாலைக்கு கட்டடங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். அதற்கமைவாக இவ்விடயத்தினை முதலமைச்சரிடம் தெரியப்படுத்தி 2016ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மாகாண சபையினூடாக கட்டடங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தோம். அதற்கமைவாக இன்று இப்பாடசாலையில் இரண்டு மாடி கட்டடங்கள் இரண்டு கட்டப்பட்டுகொண்டு வருகின்றது என தெரிவித்தார்.
மேலும் இன்ஷாஅல்லாஹ் இப்பாலர் பாடசாலையிலுள்ள இருபத்தி மூன்று மாணவர்களும் 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு செல்லும்போது தனது சொந்த நிதியிலிருந்து இம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாக்குறுதியளித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.