எம்.வை.அமீர்-
நாட்டின் வரலாற்றிலும் நாட்டை நேசிக்கும் மக்களின் மனங்களிலும் தனது பெயரை மிக அழுத்தமாக பத்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையின் அவசியம் மக்களால் உணரப்படுவதாகவும் தற்போது உள்ள நல்லாட்சிமீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வர் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவியின் ஏற்பாட்டில் கல்முனையில் 2017-03-18 ஆம் திகதி இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுள்ளாவும் பங்குகொண்டிருந்தார்.
இங்கு கருத்துத்தெரிவித்த முன்னாள் அமைச்சர் அஸ்வர், பாரிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களின் அபிலாஷைகள் தற்போதைய ஆட்சியில் நிறைவடையவில்லை என்றும் மாறாக நல்லாட்சி பொல்லாட்சியாக மாறியுள்ளதாகவும், நாட்டையும் மக்களையும் பரிபாலித்து அபிவிருத்திகளை அள்ளிவழங்கக்கூடிய இந்த யுகத்தின் சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என்றும் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்து எவ்வேளையும் எங்கும் சுதந்திரமாக சென்றுவரக்கூடிய சூழலை உருவாக்கிய சிறந்த தலைவர் என்றும் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கு பெரும்பாண்மையாக வாக்களித்த முஸ்லிங்கள் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என கவலைப்படுவதாகவும் நால்லாட்சிக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் ஹக்கீம் றிசாட் உள்ளிட்டவர்கள் நல்லாட்சியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களின் விரோதிகள் உள்ளதாக கூறியவர்கள் நல்லாட்சியில்தான் அந்த முஸ்லிம் விரோதிகள் உள்ளதை உணரத்தொடன்கியுள்ளதாகவும் மர்ஹும் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை முஸ்லிம் தீவிரவாதிகளின் தொட்டில் என புத்தகம் எழுதிய சம்மிக்க ரணவக்க, நியாயம் வழங்க ஞானஸாரவை அழைத்துவரும் நீதி அமைச்சர் போன்றவர்கள் நல்லாட்சியில்தான் இருப்பதையும் மக்கள் மறந்துவிட முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நோக்கி தற்போது மக்கள் அணிதிரள்வதாகவும் அந்த அணியில் முஸ்லிம் தலைவர்களும் மக்களும் இணைந்துகொள்ளுமாறும் நாட்டின் மீதும் முஸ்லிங்களின் மீதும் கொண்டுள்ள உண்மையான பற்றின் காரணமாக அழைப்புவிடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் தேவைகளையும் அவர்கள் எதிநோக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக முன்னாள் ஜனாதிபதி புரிந்து வைத்துள்ளதாகவும் முஸ்லிம் தலைவர்கள் புரிந்துணர்வின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கும் விசேடமாக கல்முனைக்கும் மகிந்த ராஜபக்ச வரவுள்ளதாக தெரிவித்த அஸ்வர், நல்லாட்சியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவது வெளிப்படையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுள்ளா போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.