ஐ.ஏ.காதிர் கான்-
கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மேலதிக நோயாளர்களை, நீர்கொழும்பு தள வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் இந்த விசேட கோரிக்கையை, டெங்குப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் அசித்த, இலங்கை வைத்தியத் துறையின் சிறு பிள்ளை வைத்திய நிபுணர்களின் தலைவர் லக்மால் டீ. சில்வா ஆகியோர் தலைமையிலான குழுவினரிடம் விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் பரவிவரும் டெங்கு நோயின் தாக்கம், மென்மேலும் அதிகரிக்குமாக இருந்தால், அதன் மூலம் பாதிக்கப்படும் டெங்கு நோயாளிகளை, துரிதமாக நீர்கொழும்பு தள வைத்திய சாலையிலுள்ள விசேட டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் அனுமதித்து, அதற்கான சிகிச்சைகளை உடனே அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், பிரதி அமைச்சர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
சுகாதார பிரதி அமைச்சரின் இந்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, இந்த அதிகாரிகளினால் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து வாரங்களாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலும், அதி தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.