திருகோணமலை மாவட்ட ரொட்டவௌ பிரதேசத்தின் சின்ன புளியங்குளம் பெரிய புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.
திங்கட்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
இப்பகுதியில் 1990 க்கு முன்னர் பல வருட காலம் மக்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட பயங்கரவாதச் சூழ்நிலை காரணமாக மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 2006 இல் கிழக்கு மீட்பின் பின்னர் இப்பகுதி விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 60 இலட்சம் ரூபா செலவில் இவ்விரு குளங்களும் புனரமைக்கப் பட்டதோடு இப்பகுதி வீதியும் புனரமைக்கப்பட்டது.
எனினும் தற்போது வனபரிபாலனத் திணைக்களம் இப்பகுதிக்கு விவசாயிகள் அங்கு செல்லத் தடை விதித்துள்ளது. எனவே இத்தடை நீக்கப்பட்டு விவசாயச் செய்கைக்கு அனுமதிக்க வேண்டும் என இம்ரான் எம்.பி இதன் போது தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ரொட்டவௌ மிகப் பழைமை வாய்ந்த கிராமம். எனவே இந்த விடயம் குறித்து சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றார். அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியும் கருத்து தெரிவித்தார்.
மக்களை அப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட அனுமதிக்குமாறும் பாரிய மரங்களல்லாத மரங்களை துப்புரவு செய்ய அனுமதிக்குமாறும் அரசாங்க அதிபர் வனபரிபாலன அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
ஊடகப்பிரிவு.