ஹைதர் அலி -
எமது சமூகத்திற்காக நாம் சில விடயங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றபோது நிருவாகத்தில் உள்ளவர்களின் இனரீதியான பாரபட்சமான செயற்பாடுகள் காரணமாக அதிகளவான சந்தர்பங்களில் எமது சமூகத்திற்கான உரிமைகள் புறக்கணிப்புச் செய்யப்படுவதனைஅவதானிக்க முடிகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கானபன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஏறாவூர் பைத்துல் ஹிமா கலாசார அபிவிருத்தி அமைப்பிற்கு கணினி வழங்கும் நிகழ்வு 2017.03.08ஆந்திகதி-புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த முறை நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 130 பேரில் வெறுமெனே நான்கு முஸ்லிம்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். எனவே இத்தகைய அரச நிருவாக சேவைகளில் எமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகளவாக இணைந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வதோடு, அவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்கப்படுத்தல்களை இத்தைகைய தொண்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
மேலும் சிறந்த சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதில் இத்தகைய தொண்டு நிறுவனங்களின் சேவைகள் இன்றியமையாததாகும். குறிப்பாக எமது சமூகத்திற்கு மத்தியில் பரவலாக அதிகரித்துக் காணப்படும் வட்டி மற்றும் ஏனைய கலாசார சீர்கேடுகளை சமூகத்திலிருந்து முற்றாக இல்லாமல் செய்வதற்கு சமூக சேவை நிறுவனங்கள் அதிகமான பங்களிப்புக்களை செய்ய வேண்டும்.
எனவே சமூக நலனினை மையமாகக்கொண்டு செயற்படுகின்ற இத்தகைய சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் தஹ்வா நிறுவனங்களையும் முன்னுரிமைப்படுத்தி நாம் அதிகளவான உதவித் திட்டங்களை முன்னேடுத்து வருவதோடு, இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்திலும் எங்களால் முடியுமான அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.